செய்திகள்

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பான தகராறில், விவசாயி ஒருவர் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்தவர் பலவேசமுத்து (58). இவருக்கும், செல்வகுமார் (55) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இன்று வழக்கம் போல வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த செல்வகுமார் அரிவாளால் பலவேசமுத்துவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பலவேசமுத்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

கொலை செய்த பின் அங்கிருந்து தப்பியோட முயன்ற செல்வகுமாரை, அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர். உடனடியாக ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பலவேசமுத்துவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொதுமக்களால் பிடித்து வைக்கப்பட்டிருந்த செல்வகுமாரை போலீசார் கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் தகராறில் முதியவர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



from dailythanthi https://ift.tt/P6Ikz7i
via IFTTT

Post a Comment

0 Comments