
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் பலி – பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரத் தவறிய இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரும் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்து தர தவறிய இந்துசமய அறநிலையத்துறையின் அலட்சியப்போக்கே பக்தரின் உயிரிழப்புக்கு காரணம் என சக பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவு, குடிநீர் உள்ளிட்ட எந்தவித வசதிகளுமின்றி பக்தர்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்த போது, திருப்பதி கோவிலை சுட்டிக்காட்டி அலட்சியமாக பதில் கூறிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், பக்தர் உயிரிழப்புக்கு என்ன காரணம் சொல்லப் போகிறார்?.
எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதோடு, கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் முறையான திட்டமிடலோடு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Tamil News Live | Today News In Tamil | Tamil News Paper | Latest and Breaking Headlines News in Tamil | தமிழ் தமிழ் செய்திகள் | தமிழ் நியூஸ் | சமீபத்திய செய்திகள் | இன்றைய தலைப்புச் செய்திகள் https://ift.tt/fQHYvcK
via IFTTT
0 Comments