
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வரும் 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் மற்றும் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகேஷ் குமார் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கருண் நாயர் மற்றும் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி டெல்லி அணியை வெற்றி பெற வைத்தனர்.
19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 208 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சமீர் ரிஸ்வி 58 ரன்களும், கருண் நாயர் 44 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். -ல் தனது கடைசி லீக் ஆட்டத்தை விளையாடிய டெல்லி தொடரை வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது.
from தினத்தந்தி தமிழ் செய்திகள்: Tamil News, Latest Tamil News, Tamil News Online, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/C8fywjs
via IFTTT
0 Comments