செய்திகள்

கொடைக்கானல்,

கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே போதை காளான் விற்பனை நடந்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் கண்காணித்து போதை காளான் விற்போரை கண்காணித்து கைது செய்தனர். இதன் காரணமாக போதை காளான் பயன்பாடு மற்றும் விற்பனை குறைந்தது.

இந்தநிலையில் கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் போதை காளான் விற்பனை தற்போது மீண்டும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, கூக்கால் உள்ளிட்ட கிராமங்களில் அரசு அனுமதி இல்லாமல் கூடாரம் (டென்ட்) அமைத்து சுற்றுலா பயணிகள் தங்குகின்றனர்.

கடந்த சில மாதங்களாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில வாலிபர்கள், சுற்றுலா பயணிகள் அங்கு படையெடுத்து கூடாரங்களில் தங்கி வருகின்றனர். இவர்களை 'குறி' வைத்து போதை காளான்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாங்கி அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் மேல்மலைக்கிராமத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிலர், போதை காளான் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியானது. அதில் போதை காளான் மீது தேனை ஊற்றி சாப்பிடுவது போலவும், பிறரை வாங்கி சாப்பிடும் வகையில் ஆசையை தூண்டும் வகையிலும் காட்சி இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வீடியோ, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் மீண்டும் தலைதூக்கும் போதை காளான் விற்பனையை முற்றிலும் ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/vjFLBDI
via IFTTT

Post a Comment

0 Comments