தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மனைவி தமிழ்செல்வி. இவர்களது மகன் கவின் (வயது 27). இவர்கள் தற்போது தூத்துக்குடி பிரையண்ட் நகர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.
நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இவர்களுக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்தனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்தனர். அப்போது, கவினும், சுர்ஜித்தின் அக்காளும் ஒரே பள்ளியில் படித்து வந்ததால் அடிக்கடி பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது.
சென்னையில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணியாற்றி வந்த கவின் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார். கடந்த 27-ந் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த சுர்ஜித், கவினை பேசுவதற்காக அழைத்து சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார்.
இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சுர்ஜித்தை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் எனது அக்காவும், கவினும் பழகி வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பழகுவதை நிறுத்துமாறு கவினிடம் கூறினேன். ஆனால் அவர் கேட்காததால் வெட்டிக்கொலை செய்தேன் என்று தெரிவித்து இருந்தாா்.
நேற்று முன்தினம் கவினின் சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவரது உறவினர்கள், முக்காணி ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப்பதிந்து, கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இதனால் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கவினின் உடலை வாங்க இன்று 3-வது நாளாக உறவினர்கள், குடும்பத்தினர் மறுத்துவிட்டனர்.
இந்த நிலையில் கொலை வழக்கின் விசாரணை அதிகாரி சுரேஷ், ஏரல் தாசில்தார் செல்வகுமார், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு நரேஷ், போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆறுமுகமங்கலத்திற்கு சென்றனர். கவினின் குடும்பத்தினரிடம் அரசு சார்பில் இழப்பீடாக ரூ.6 லட்சத்தை கொடுத்தனர். ஆனால் அதை அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். போலீஸ் தம்பதியை கைது செய்ய வேண்டும். அதுவரை கவினின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர். மேலும் கவினும், அந்த பெண்ணும் இருக்கும் புகைப்படத்தை அவரது உறவினர்கள் வெளியிட்டு இதை ஆதாரமாக வைத்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த சூழலில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதால், சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் நேற்று பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரையும் கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்கி அடக்கம் செய்வோம் என உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. விசாரணை பாரபட்சமின்றி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வழக்கு விசாரணை வெளிப்படையாக நடைபெறுவதற்கு குற்றம்சாட்டப்பட்டவரின் பெற்றோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக டிஜிபி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட கவினின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று விசாரணையின் அடிப்படையில் பெண்ணின் தந்தையான சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சரவணன் மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
from Tamil News: Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper | இன்றைய தமிழ் செய்திகள் https://ift.tt/EzdTaA0
via IFTTT
0 Comments