சென்னை,
செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகளுக்கு தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை 4,825 ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மீதமுள்ள 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இதில், 1,000 ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், 169 ஒப்பந்த நர்சுகளுக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 831 ஒப்பந்த நர்சுகளுக்கும் விரைவில் பணி நிரந்தர ஆணைகள் வழங்கப்படும்.
எம்.ஆர்.பி. ஒப்பந்த நர்சுகள் முறை என்பது 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம். 2015-ம் ஆண்டு முதல் 2021 வரை 1,871 இடங்களை மட்டுமே அ.தி.மு.க. அரசு நிரப்பியது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்யவில்லை. ஆனால், தமிழ்நாடு அரசு 2,146 பேரை பணி நிரந்தரம் செய்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தின் மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எனவே, எம்.ஆர்.பி. நர்சுகளுக்கும் ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு வழங்கும் அரசாணை விரைவில் வெளியிடப்படும். கோர்ட்டு உத்தரவுப்படி இதற்கு முன்பு மகப்பேறு விடுப்பு எடுத்தவர்களுக்கும் நிலுவை தொகை வழங்கப்பட இருக்கிறது. பொங்கலுக்கு முன்பு இந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம். தொழிலாளர்கள் மேல் அக்கரை கொண்ட அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
from Tamil News Online | தமிழ் செய்திகள் | Latest Tamil News, Today Breaking News & Headlines in Tamil, Tamil News Paper https://ift.tt/HGj8LwU
via IFTTT
0 Comments